வேடுவன் – Veduvan – Web Series – திரை விமர்சனம் – 4/5அ

0
51

Zee 5 தயாரிக்கும் சீரிஸ்களுக்கு எப்பவுமே தனித்துவம் உண்டு. ஆங்கில வெப் சீரிஸ்களு க்கு இணையாக தமிழ் வெப் சீரிஸ்களையும் ரசிக்க முடிந்தது என்றால் அதற்கு முன்னோடி Zee 5 தான்.

அந்த நம்பிக்கையை இந்த ‘ வேடுவன் ‘ வெப் சீரிஸும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 

இதன் கதைக்களமே வித்தியாசமானது. சூரஜ் என்கிற நடிகரின் படங்கள் தொடர்ந்து தோல்வியடைய அதற்கு காரணம் கதையில் அவர் தலையிடுவதுதான் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அதில் நொந்து போகும் அவர் அடுத்த படத்தை வெற்றி படமாக கொடுக்க ஆயத்தப்படுகிறார். 

அந்த நேரம் பார்த்து அவரிடம் ஒரு புதுமுக இயக்குனர் கதை சொல்ல வர, அது அவர் கனவில் கண்ட போலீஸ் ஸ்டோரி ஆக விரிகிறது.

அதில் அண்டர்கவர் காப் ஆக வரும் அவர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கிறார். மேலிடத்தால் அடையாளம் காட்டப்படும் சமூக விரோதிகளை அவர்களது இருப்பிடத்திற்கு சென்று மாறுவேடத்தில் பல நாள் அவர்களை கண்காணித்துப் போட்டுத் தள்ளுவதுதான் அவரது வேலை. 

அப்படி சென்னையின் பிரபல ரவுடியை மீனவர் குப்பத்தில் வைத்துப் போட்டுத் தள்ளுபவர் அடுத்த அசைன்மெண்டாக கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரு வெளியூர் வக்கீலை என்கவுண்டர் செய்யப் பணிக்கப்படுகிறார்.

அதற்காக அவர் அந்த வக்கீலை கண்காணிக்கும் வேளையில் அவரது முன்னாள் காதலியை சந்திக்க நேர்கிறது. அவளும் அவரை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து தன் வீட்டுக்கு அழைத்துப் போகிறாள். 

போன இடத்தில்தான் தெரிகிறது அவர் கொல்ல வந்த வக்கீல் அவளது கணவர் என்று. அன்பான அந்தக் குடும்பம் அவர் மீது அன்பை பொழிகிறது. இந்நிலையில் அவரால் கடமையாற்ற முடிந்ததா அல்லது அன்பு ஜெயித்ததா… அதன் விளைவுகள் என்ன என்பதைச் சொல்வதுதான் அந்தக் கதை.

சூரஜ் கேட்கும் கதை அதுவாக இருக்க அந்தப் படத்தை சூரஜ் ஒத்துக்கொண்டாரா அதில் அவரது தலையீடு இருந்ததா என்பதெல்லாம் மெயின் கதையில் உள்ள சுவாரசியங்கள். 

நடிகர் சூரஜ் ஆக கண்ணா ரவி நடித்திருக்கிறார். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்றாலும் காவலர் சீருடை அணியாமல் அந்தந்த இடத்துக்கு ஏற்ப பிச்சைக்காரன் மற்றும் பரோட்டா மாஸ்டர் என்று பலவித வேடங்களில் மாறித் தெரிபவர், அந்தந்தப் பாத்திரங்களாகவே மாறி இருப்பது நன்று.

தன்னுடைய இமேஜ் பற்றி எல்லாம் கவலைப்படாமல் பாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் உடைகளும் ஒப்பனையுமாக அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். 

காதலியை கண்ட மாத்திரத்தில் மகிழ்ச்சி அடைவதும், அந்தக் காதல் மகிழ்ச்சியைக் கூட தனது அன்பான மனைவியிடம் பகிர்ந்து கொள்வதுமாக அந்தப் பாத்திரம் பவித்திரமாக இருக்கிறது. அதை நேர்த்தியாக கையாண்டு இருக்கிறார் கண்ணா ரவி.

கண்ணா ரவி நடிகராக இருக்கும் போது அவர் மனைவியாக வரும் ஷ்ரவனிதா ஶ்ரீகாந்த், அவருக்கு சரியான வழிகாட்டியாக இருப்பது ரசிக்க வைக்கிறது. 

படத்துக்குள் கண்ணா ரவி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக வரும்போது மனைவியாக வரும் லாவண்யா, அவரை ஆற்றுப்படுத்துவதும் அவரது காதலியை புரிந்து கொள்பவருமாக வருவதும் அருமை. 

இப்படி போகிற இடங்களில் எல்லாம் அழகான அனுசரணையான மனைவிகளை அடைந்து விடும் கண்ணா ரவியின் முன்னாள் காதலியாக வரும் வினுஷா தேவி, தன் வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்று கணவனிடம் அறிமுகப்படுத்தி விருந்து வைப்பது அமர்க்களம். 

இந்த மூன்று பெண்களின் வினுஷா தேவிதான் மொத்த கதையையும், நம் மனதையும் ஆக்கிரமிக்கிறார். 

கணவனை கொன்றவனின் தலையை வெட்டிக்கொண்டு வருவதுதான் தலையாய வேலை என்று கர்ஜிப்பவர் ஆனால் அதற்கு பின் ஒன்றுமே செய்யாதது பெரும் குறை.

போலீஸ் கமிஷனராக வரும் ஜீவா ரவிக்கு சின்ன பாத்திரம்தான் என்றாலும் நிறைவாக செய்திருக்கிறார். 

பவன் எழுதி இயக்கியிருக்கும் இதன் திரைக்கதை மிகவும் நுட்பமானது. மூன்று நிலைகளில் நின்று கதை சொல்ல வேண்டிய அவசியத்தில் அதைக் குழப்பம் இல்லாமல் சொல்லி இருக்கிறார். 

அதிலும் காதலியின் கணவன்தான் கொல்ல வந்த நபர் என்று கண்ணா ரவி புரிந்து கொள்வதும் ஆனால் அவர் மீது அந்த குடும்பமே அன்பைப் பொழிவதுமாக வரும் எபிசோடுகள் அடுத்து என்ன நடக்கும் என்கிற பரபரப்பைக் கூட்டுகிறது. 

அதற்குப் பின் நடக்கும் சம்பவங்கள் எல்லாமே அதிரடி. 

நேரிலேயே பார்ப்பது போன்ற உணர்வை ஒளிப்பதிவாளரும், தேவையான உணர்ச்சிகளைக் கடத்துவதில் இசையமைப்பாளரும், பரபரப்பை பக்குவமாக தந்திருப்பதில் படத்தொகுப்பாளரும் நிறைய வேலை பார்த்திருக்கிறார்கள். 

நாம் செய்தித்தாள்களில் பார்க்கும் நிஜ சம்பவங்களின் அடிப்படையில் இந்தக் கதை அமைக்கப்பட்டு இருப்பதுடன், அந்த கதை எப்படி சொல்லப்படுகிறதோ அதுவே உண்மையாக இருக்க சாத்தியமில்லை என்கிற உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார் இயக்குனர். 

அதை நாம் உணரும்போது நாம் தெரிந்து வைத்திருக்கும் அத்தனை உண்மைக்கதைகள் மேலும் ஒரு சந்தேகம் எழவே செய்கிறது. 

அதுவே இந்தப் படைப்பின் வெற்றி..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here